பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
என் குப்பை எனது பொறுப்பு(கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்கு நகர் மன்ற தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய 10 தூய்மை பணியாளர்கள் மற்றும் 6 தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் வழங்கி வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர் மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.