திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க பவன்கல்யாண் அக்கா மகனும் டோலிவுட் ஹீரோவுமான சாய் தரம் தேஜ் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சாய்தரம் தேஜ் நேற்றுமுன்தினம் பித்தாபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கான்வாய் வாகனத்தின் மீது ஒய்.எஸ்.ஆர். கட்சியினர் கற்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசினர். இதில் ஜன சேனா தொண்டர் மீது கல் பலமாக விழுந்ததில் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் பைக்கில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.