திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருவில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சம்பத் நகர் சிவன் கோயில் அருகே நேற்று மதியம் கார்த்திகேயா என்ற 6 வயது சிறுவன் தெருவில் நடந்து சென்று கொண்டுருந்தான். அப்போது தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென கார்த்திகேயனை நாய்கள் சுற்றி வளைத்தது. இதை பார்த்து அலறிக்கொண்டே சிறுவன் ஓடினான். ஆனால் நாய்கள் துரத்திச்சென்று, சிறுவனை கடித்து குதறியது.
இதில் பயந்து போன சிறுவன் கதறி அழுதான். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் சிறுவனைத் கடிக்கும் நாய்களை உடனடியாக விரட்டினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயாவை மீட்டு சிகிச்சைக்காக உறவினர்கள் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெருவில் நடந்து சென்ற சிறுவனை நாய்கள் கடித்து குதறிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.