Sunday, June 2, 2024
Home » சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி: பிரேமலதா அறிவிப்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி: பிரேமலதா அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று பிரேமலதா அறிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார். விஜயகாந்த் உடல் நேற்று முன்தினம் காலை தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இறுதி ஊர்வலம் நடந்தது. இங்கு அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து குடும்ப முறைப்படி விஜயகாந்துக்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. கண்ணீர் மல்க அவரது மகன்கள் இறுதி சடங்குகளை செய்தனர். அதன் பிறகு விஜயகாந்த் உடல் இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்போது கோயம்பேடு சாலைகளில், மேம்பாலங்களில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் செல்போன் டார்ச் ஒளி மூலம் கேப்டன் விஜயகாந்துக்கு பிரியா விடை கொடுத்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் அடக்கம் செய்த இடத்தை பார்ப்பதற்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என்று நேற்று காலை முதல் வரத்தொடங்கினர். இதைத் தொடர்ந்து கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் நேற்று காலை விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகர், சண்முகபாண்டியன், மைத்துமனர் சுதீஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவியும் பூஜை செய்தும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி: கேப்டன் மறைவிற்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கும் தலை வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 24 மணி நேரமும் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்துக்கு பூஜைகள் செய்யப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தலாம். வெகு விரைவில் கேப்டன் விஜயகாந்த் எங்கள் வீட்டிலேயே பேரனாக இருப்பார். உலகம் முழுவதும் இறுதி அஞ்சலியை காண்பித்த ஊடகங்களுக்கு நன்றி. ஒட்டுமொத்த மக்களும் கேப்டனுக்கு செலுத்திய அஞ்சலிக்கு நன்றி.

இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை அவர் நம்முடன் இருப்பார். இனிமேல் யார் வேண்டுமானாலும் கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தலாம். எங்களுக்கு அதிகமான பணி உள்ளது. போக போக அதனை தெரிவிப்போம். லங்காவில் ஒரு மாகாணத்தில் கடை அடைப்பு செய்து இருகிறார்கள். திரைத்துறை படப்பிடிப்பு நிறுத்தி உள்ளார்கள் எல்லோருக்கும் நன்றி. இதுவரை 15 லட்சம் மக்கள் வந்து கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை: இந்த நிலையில் இன்று காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பொதுமக்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தலாம் என தேமுதிக அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

11 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi