சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. இலங்கை அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி அத்துமீறல்கள் தொடர்ந்தால் தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா – இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 58 மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளையும் மீட்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.