சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அறிவித்தார். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அதிமுக-தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்தது. கடைசியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அதில் தேமுதிகவுக்கு மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர். இந்த 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக பிரேமலதா வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் இளைஞர் அணி செயலாளர் கு.நல்லத்தம்பி, கடலூர் தொகுதியில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகின்றனர். தஞ்சாவூர் தொகுதியில் முன்னாள் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பி.சிவநேசன், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள விஜயபிரபாகர் விஜயகாந்தின் மகன் ஆவார். அவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து அவர் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர் விஜயகாந்த். பிறகு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர்.
இதனால், தான் விஜய பிரபாகர் தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜ சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த தொகுதியில் கடும் போட்டி உருவாகியுள்ளது.