சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்ட பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்த பல கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க அண்ணாமலை தீவிரமாக முயன்றார். அதன் ஒரு கட்டமாக ஜாதிக்கட்சிகள் பலம் கொண்ட பாமக, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், தேவநாதன் யாதவ் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தார் அண்ணாமலை. அதன்பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் கடைசி நேரத்தில் சேர்த்தனர். அதில் டிடிவி தினகரனுக்கு தேனி, திருச்சி தொகுதியும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரமும் ஒதுக்கப்பட்டது.
தேனி தொகுதியில் டிடிவி தினகரனும், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் களம் இறங்குகின்றனர். அதற்கு காரணம், அந்த இரு தொகுதியும் முக்குலத்தோர் அதிகமாக உள்ள தொகுதியாகும். இந்த இரு தொகுதிக்கும் முக்குலத்தோர் சமுதாய தலைவர்களும், சிறிய சிறிய ஜாதி அமைப்புகளும் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன. 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியன்குளம் என்ற ஊர் சூறையாடப்பட்டது. அதைத் தொடர்ந்து கலவரங்களும் ஏற்பட்டன. இது ஒற்றுமையாக இருந்த இரு சமுதாய மக்களிடையே பெரிய பிளவை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிமுகவுக்கு சார்பு நிலையை எடுத்தனர். திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஜாதியை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் ஜாதி மோதல்கள் குறைந்து வந்தன. அதன்பின் இரு சமுதாய மக்களிடம் பெரிய அளவில் ஒற்றுமை நிலவியது. சில அரசியல்வாதிகள் தங்களை பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்துவதாக இரு தரப்பினரும் கருதி வந்தனர். இந்நிலையில், தென் மாவட்டத்தில் உள்ள தேனி, ராமநாதபுரத்தில் தற்போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களது கூட்டணியில் உள்ள பாஜ மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு அங்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை.
தொண்டர்கள் பலமும் இல்லை. இதனால் ஜாதியை நம்பியே இருவரும் களத்தில் குதித்துள்ளனர். இதனால் அவர்களது பிரசாரத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே அதிகமாக கலந்து கொள்கின்றனர். இரு வேட்பாளர்களுடனும் அவர்கள்தான் செல்கின்றனர். தங்களது ஜாதி பலம் அதிகமாக உள்ள கிராமங்களுக்கு பணத்தை வாரி இறைக்கின்றனர். இதனால் மற்ற சமுதாய மக்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களுக்கு செல்ல இரு வேட்பாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பல கிராமங்களில் தேர்தல் நேரத்தில் பிரச்னை ஏற்படலாம் என்று போலீசார் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், இரு வேட்பாளர்களும் குறிப்பிட்ட சமுதாய மக்களையே அதிகமாக அழைத்துச் செல்வதால், மற்ற அனைத்து சமுதாய மக்களும் ஜாதி ஓட்டுக்களை நம்பி களத்தில் நிற்கும் இந்த இரு வேட்பாளர்களை ஒருவித அச்சத்துடனேயே அணுகி வருகின்றனர். இதனால் இந்த தொகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்ற சமுதாய வாக்குகள் மற்றும் சிறுபான்மை வாக்குகளை குறி வைத்து பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற பிறகு பணம் தருவதாக சொன்னார். ஆனால் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதேபோல தற்போது தேனி தொகுதியில் 50 ரூபாய டோக்கன் கொடுப்பதாக கூறப்படுகிறது. வெற்றி பெற்ற பிறகு பணம் தருவதாக வாக்குறுதி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ பணத்தை தண்ணீராய் செலவு செய்கிறாராம். ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தொகுதியிலும் உச்சக்கட்ட பரபரப்பு எழுந்துள்ளது.