Monday, June 17, 2024
Home » அதிமுகவுடன் கூட்டணி இழுபறி நீடிப்பு 40 தொகுதிகளுக்கும் நாளை முதல் தேமுதிக விருப்பமனு பெறுகிறது: பிரேமலதா அறிவிப்பால் பரபரப்பு

அதிமுகவுடன் கூட்டணி இழுபறி நீடிப்பு 40 தொகுதிகளுக்கும் நாளை முதல் தேமுதிக விருப்பமனு பெறுகிறது: பிரேமலதா அறிவிப்பால் பரபரப்பு

by Ranjith

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி இழுபறி நீடித்து வரும் நிலையில் தேமுதிகவில் 40 தொகுதிக்கான விருப்ப மனுக்கள் நாளை முதல் பெறப்படும் என்று பிரேமலதா நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக தனது கூட்டணியில் தேமுதிகவை இடம் பெறச் செய்வதற்கு பேச்சுவார்த்தையில் இறங்கியது. முதல் முறையாக கடந்த 1ம் தேதி அதிமுக குழுவினர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் தேமுதிக நிர்வாகிகள் கடந்த 6ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று பேச்சு நடத்தினர். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாமல் இருந்தது. தேமுதிக ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதே இந்த இழுபறிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இரு தரப்பினரும் ரகசியமாக பேசி வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20ம் தேதி தொடங்குகிறது. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் தேமுதிகவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளது. மேலும் மாநிலங்களவை சீட்டை அதிமுக ஒதுக்குமா? என்ற கேள்விஎழுந்துள்ளது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை நாளை(19ம் தேதி) காலை 11 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 20ம் தேதி(புதன்கிழமை)மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேமுதிகவின் நிர்வாகிகளும், அடிப்படை உறுப்பினர்களும் மனு அளிக்க தகுதியானவர்கள்.

பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வருகிற 21ம் தேதி(வியாழக்கிழமை) காலை 10மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவுடன் இழுபறி நீடித்து வரும் நிலையில் பிரேமலதாவின் திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தேமுதிக தனித்து போட்டியிட போகிறதா? என்ற கேள்வியும் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

fifteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi