இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான்கான் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் மாஜி பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த ஏப்ரல் 2022ல் பதவி விலகினார். அவர்மீது பல்வேறு வழக்குகளில் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த செப் 26 முதல் ராவல்பின்டி அடியாலா சிறையில் இருக்கிறார். அவரிடம் ரூ.1480 கோடி இந்திய பண மதிப்புள்ள அல்-காதிர் டிரஸ்ட் ஊழல் வழக்கு விசாரணையை பாக். ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தி வருகிறது.
அந்த வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டி கடந்த நவ 14ல் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கான் மனுதாக்கல் செய்திருந்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் நேற்று முன் தினம் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவர் மீது ஒரே நேரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஜாமீன் அளிப்பது குறித்து அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று இம்ரான்கான் வழக்கறிஞர்களிடம் கோர்ட் தெரிவித்தது.
* தேர்தல் ஆணையம் கெடு இம்ரான்கான் வழக்கு
பாகிஸ்தானில் பிப்.8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு அனைத்து தொகுதிகளிலும் பொதுச்சின்னமாக பேட் சின்னத்தை வழங்க 20 நாட்களுக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்து உள்ளது. இது தனது கட்சி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க நடக்கும் சதி என்று கூறி இம்ரான்கான் தரப்பு தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சிந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.