மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் 2வது முறையாக சரத் பவாரை சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்பி.க்களுடன் ஆளும் கட்சியான சிவசேனா (ஷிண்டே)-பாஜ கூட்டணியில் இணைந்து கடந்த 2ம் தேதி துணை முதல்வரானார். அதன் பிறகு அவர் மாநிலங்களவை எம்பி பிரபுல் படேல் மற்றும் சகாக்களுடன் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர்.
இந்நிலையில், அஜித் பவார், பிரபுல் படேல் ஆகியோர் நேற்றும் சரத் பவாரை ஒய்.பி. சவான் மண்டபத்தில் சந்தித்தனர். இதன் போது, கட்சியின் ஒற்றுமையை காக்க நடவடிக்கை எடுக்கும்படி சரத் பவாரிடம் வலியுறுத்தியதாக பிரபுல் படேல் தெரிவித்தார். பிரிந்து சென்ற பிறகு அவர்கள் சரத்பவாரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். அவர் மேலும் கூறுகையில், நாளை (இன்று) டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தானும், அஜித் பவாரும் கலந்து கொள்வதாக கூறினார்.