லண்டன்: ஜெர்மனி அரசின் பராமரிப்பில் உள்ள 2 வயது இந்திய குழந்தையை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க கோரி பிராங்க்பர்ட்டில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். குஜராத்தை சேர்ந்த பாவேஷ் ஷா என்பவர் ஜெர்மனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்தார். அவர் மனைவி தாரா ஷா. அவர்களின் குழந்தை அரிஹா ஷா(2). 7 மாத குழந்தையாக இருந்த அரிஹாவிற்கு ரத்தம் போக்கு இருந்ததால், மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சையளித்தனர். மருத்துவரின் பரிந்துரையின்படி, அரிஹா பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அவளைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை அரிஹா, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிவித்ததுடன், சட்டப்படி அவர், குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கும் அவர் தகவல் அளித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு, அரசின் குழந்தை நல காப்பகத்துக்கு குழந்தை அனுப்பப்பட்டது. தாரா ஷா தனது 2 வயது மகளை தன்னுடனேயே வைத்து வளர்க்க ஆசைப்படுகிறார். குழந்தையை தங்களிடம் ஒப்படைக்க கோரிய பெற்றோரின் மனுவை நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.குழந்தை அரிஹாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க கோரி பிராங்க்பர்ட்டில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.