கரூர்: தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் வெங்கமேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து விஏஓ சுரேஷ் கேள்வி எழுப்புயும் முறையாக பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக விஏஓ சுரேஷ், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் திருவிகா, தங்கவேல், கிருஷ்ணன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் கலைமணி, தாமோதரன், செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழிதேவன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றியபோது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட 1,500 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.