திருச்சி : திருச்சியில் ஓ பன்னீர் செல்வம் நடத்தும் மாநாட்டில் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மாநகர காவல் ஆணையரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வம் அணி தரப்பில் திருச்சியில் நாளை மறுநாள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக திருச்சியில் முகாமிட்டு ஓ பன்னீர் செல்வம் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு மாநகர காவல் துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே தேவகோட்டையில் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், அதிமுக கொடியை சட்டையாக கூட தைத்து போடுவோம், யாரும் கேள்விகேட்க முடியாது என்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், விசாரணையின் போது பழனிசாமிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் நீதிபதிகள், தீர்ப்பின்போது மட்டும் அவருக்கு தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய கொடி, யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என்றும் திருச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.