வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த லோயர் பாரளை பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (40). இவர், நேற்று இரவு வீட்டின் முன் தவறி விழுந்து காயமடைந்தார். அவரது மனைவி சாந்தி (38) மற்றும் மகன் ஆகியோர் சிவகுமாரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆம்புலன்சை தர்மபுரி மாவட்டம், தென்னகரம், ஜம்மஅள்ளியை சேர்ந்த காளிதாஸ் (32) ஓட்டினார். மேலும் ஆம்புலன்சில் டெக்னீசியன் வனராஜ் இருந்தார்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு முன் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, டிரைவர், டெக்னீசியன் இறங்கினர். டிரைவர் பின் கதவை திறந்தபோது, ஆம்புலன்ஸ் பின்நோக்கி நகர்ந்தது. நோயாளி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை உள்ளேயே அமர வைத்தபடியே கதவை அடைத்து விட்டு கைகளால் நிறுத்த முயன்றார் டிரைவர். இருப்பினும் 100 அடி பின்நோக்கி வந்தது. சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் சிக்கி டிரைவர் காளிதாஸ் உயிரிழந்தார். அந்த நேரத்தில் ஆம்புலன்சின் பின்பக்க கதவு திறந்தது.
நோயாளி சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு, காவலர் குடியிருப்பு வளாகத்தில், 30 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் சக்கரத்தில் சிக்கி சிவகுமாரும் உயிரிழந்தார். இதை பார்த்ததும் அவ்வழியாக வந்தவர்கள், வாகனத்தில் இருந்த சாந்தி மற்றும் மகனை லேசான காயத்துடன் மீட்டனர்.
இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விபத்தில் உயிரிழந்த காளிதாஸ், சிறப்பாக பணியாற்றி பலரை காப்பாற்றி உள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு பணி முடிந்து கடைசி பேருந்தில் தருமபுரி செல்வதற்காக இருந்தார். இதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வைத்துள்ளார். இவரின் உயிரிழப்பு இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.