சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் போன்று தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றமும் சிறப்பாக செயல்படும் என்று அமைச்சர் கயல்விழி கூறினார். இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பழங்குடியினர் நலனை காக்க தமிழ்நாட்டில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் இல்லாதபோதிலும் பழங்குடியினர்களின் நலன் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
பழங்குடியின மக்களின் முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதால், பழங்குடியின பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்கு அமைத்தல் மற்றும் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் பழங்குடியினரின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய அலுவல் சாரா உறுப்பினர்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இம்மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு 2021ம் ஆண்டு இவ்வரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் செயல்படுவதை போன்று சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.