திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 6 வயது சிறுமி கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38). துபாயில் பணி புரிந்து வந்தார். அவரது மனைவி வித்யா. இந்த தம்பதிக்கு 6 வயதில் நக்ஷத்ரா என்ற ஒரு மகள் இருந்தார். ஸ்ரீமகேஷின் மனைவி வித்யா கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
துபாயில் இருந்து வந்த ஸ்ரீமகேஷும், அவரது மகள் நக்ஷத்ராவும் வீட்டில் இருந்தனர். அவரது தாய் சுனந்தா (62) அருகில் உள்ள மகளின் வீட்டில் இருந்தார். இந்த சமயத்தில் வீட்டில் இருந்து திடீரென நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு சுனந்தா சென்ற போது நக்ஷத்ரா கழுத்தை வெட்டி கொன்று விட்டு கோடாரியுடன் ஸ்ரீமகேஷ் ஆவேசமாக நின்று கொண்டு இருந்தார். திடீரென சுனந்தாவையும் அவர் கோடாரியால் வெட்டினார். சுனந்தாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீமகேஷை கைது செய்தனர்.