திருமலை: நடிகர் சிரஞ்சீவி நிர்வகித்து வரும் ரத்த வங்கியில், கொடையாளர்களிடமிருந்து இலவசமாக சேகரிக்கப்பட்ட ரத்தத்தை விற்பதாக கடந்த 2011ம் ஆண்டு நடிகர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியினர் தெரிவித்தனர்.
இதற்கு சிரஞ்சீவியின் மைத்துனரும், தயாரிப்பாளருமான நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு, ஐதராபாத் நம்பப்பள்ளி 17வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜீவிதா, ராஜசேகர் ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அபராதத்தை செலுத்திய பின்னர் மேல்முறையீடு செய்ய அனுமதித்து ராஜசேகர் தம்பதிக்கு ஜாமீன் வழங்கியது.