கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கிருஷ்ணராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை நேற்று நுழைந்தது. இதனை முன்னிட்டு யாத்திரையை வரவேற்கும் வகையில் பல்வேறு இடங்களில் ராகுல்காந்தியின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கான்பூரில் ராகுல்காந்தியை கிருஷ்ணராக சித்தரித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை ஓட்டி வரும் கிருஷ்ணராக ராகுலும், அவருடன் அர்ஜூனராக மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயின் படமும் இடம்பெற்றுள்ளது. கன்டோன்மென்ட் அருகே உள்ள மால் ரோடு, கந்தகர் பகுதியில் இந்த பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சந்தீப் சுக்லா இந்த பேனருக்கு ஏற்பாடு செய்துள்ளார். பேனரின் கீழ் பகுதியில் அவரது புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.