ஆண்டிபட்டி, மே 27: ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணி நடைபெற்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி-ஜெயமங்கலம் இடையிலான சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது.
இந்த சாலையின் தரம் குறித்து திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, மதுரை கோட்ட பொறியாளர் சந்திரசேகர், தேனி உதவி கோட்ட பொறியாளர் தங்கப்பாண்டி, ஆகியோர் உள் தணிக்கை மற்றும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தேனி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், தேனி தரக்கட்டுப்பாட்டு உட்கோட்டத்தின் உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.