காரைக்குடி, மே 27: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டு மையம் அமர்சேவா சங்கம் சார்பில் அமர் சேவா அழகப்பர் கோப்பை 2024க்கான தேசிய அளவிலான ஆடவர் வீல்சேர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 7 வீக் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் மகாராஷ்டிரா அணி முதலிடத்தையும், மத்தியபிரரேச அணி 2வது இடத்தையும், தமிழ்நாடு மற்றும் தெலுங்கான அணிகள் ஒரே புள்ளிகள் பெற்று 3வது இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் எதையும் சாதிக்க கூடிய திறன்களை இயற்கையாகவே பெற்றுள்ளனர். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செயல்பாடுகளே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
இப்பல்கலைக் கழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பு பள்ளி மற்றும் பாரா விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக வரும் கல்வியாண்டு முதல் பாரா விளையாட்டு பயிற்சி குறித்த 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு துவங்கப்பட உள்ளது என்றார். அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாராவிளையாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தர் நன்றி கூறினார்.