புதுடெல்லி: டெல்லியின் பிரதமர் மோடியின் வீட்டின் மேலே மர்ம டிரோன் பறந்ததால் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடியின் வீட்டின் அருகே டிரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை பிரதமர் மோடியின் வீட்டின் மேலே மர்ம டிரோன் பறந்துள்ளது. இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் இது குறித்து டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் அங்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரால் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பறந்ததாக எதனையும் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘பிரதமரின் இல்லத்திற்கு மேலே அதிகாலை டிரோன் பறக்கவிடப்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்டோம். ஆனால் அதுபோன்ற எந்த டிரோனும் கண்டறியப்படவில்லை. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டோம். அவர்களாலும் பிரதமர் வீட்டின் அருகே எந்த பொருளும் பறந்ததாக கண்டறிய முடியவில்லை” என குறிப்பிடப்பட்டு இருந்தது.