துவரங்குறிச்சி: திருச்சி அருகே குரங்கை விழுங்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சமத்துவபுரம் குடியிருப்பு பகுதி அருகில் நேற்று 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று குரங்கை பிடித்து இறுக்கி சுற்றிக்கொண்டிருந்தது. பாம்பின் பிடியில் தவித்த குரங்கு கதறியது. இதனைக்கண்ட மற்ற குரங்குகள் பயங்கரமாக குரல் எழுப்பின. இந்த குரங்குகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று, குரங்கினை இறுக்கி பிடித்து விழுங்க முயற்சித்து கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர், சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மலைப்பாம்பினை போராடி பிடித்து குரங்கை இறந்த நிலையில் மீட்டனர். மலைப்பாம்பு மற்றும் இறந்த குரங்கினை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.