திருச்சி: ரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா முகூர்த்தக்கால் நடும் வைபவம் நேற்று நடைபெற்றது. டிசம்பர் 23ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ரங்கம் ரங்கநாத கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் நேற்று தொடங்கியது. கோயில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. வரும் டிசம்பர் 12ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. 12ம் தேதி பகல்பத்து விழா, தொடர்ந்து பகல் 10 விழாவின் பத்தாம் திருநாளான மோகினி அலங்காரம், 22ம் தேதி ராபத்து திருவிழாவின் முதல் நாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் பரமபத வாசல் திறப்பு டிச.23ம் தேதி அதிகாலை 4மணிக்கு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் இனிதே நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.