வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள வால்பரைசோ பல்கலைக்கழகத்தின் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தவர் இந்திய மாணவர் வருண் ராஜ் புச்சா(24). கடந்த மாதம் 29ம் தேதி இன்டியானாவில் உள்ள ஜிம்மில் இருந்த வருண், ஜோர்டான் ஆன்ட்ராடே என்பவரால் கத்தியால் பயங்கரமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட வருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வருணை தாக்கிய ஜோர்டானை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வருண் ராஜ் புச்சா உயிரிழந்துவிட்டதாக பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகம் ஒருவரை இழந்துவிட்டதாகவும், வருணின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 16ம் தேதி உயிரிழந்த வருணை நினைவுகூரும் வகையில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த வருண் ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.