இம்பால்; மணிப்பூரின் இம்பாலில் குண்டுபாய்ந்த நிலையில் இரண்டு சடலங்களை போலீசார் மீட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பிரிவினரிடையே மே மாதம் மோதல் வெடித்தது. கடந்த சில நாட்களாக அமைதி நிலவிய நிலையில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தின் டெய்ரென்போக்பி பகுதியில் இருந்து நடுத்தர வயது பெண்ணின் சடலம் புதனன்று மீட்கப்பட்டுள்ளது. அவரது தலையில் குண்டுபாய்ந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காங்சுப் பகுதியில் இருந்து சமீபத்தில் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்ட 4 பேரில் இந்த பெண்ணும் ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் டக்ஹாக் மபால் மாக்ஹா பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைகள் பின்புறம் கட்டப்பட்டு, தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார்.
அவரது சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு இன்டர்நெட் சேவை: மணிப்பூரில் அமைதி நிலவும் பகுதிகளில் அரசு இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து உக்ருல், சேனாபதி, சந்தல் மற்றும் தமேங் லாங் ஆகிய 4 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்கியது.