சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் உறுதியுடன் போராடினர். தமிழகத்தை பாலைவனமாக்கும் நிலக்கரி சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என தேமுதிகவும் வலியுறுத்தி வந்தது. மேலும், இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்டப்பேரவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் ஒன்றிய அரசு இனிமேல் அறிவிக்கக் கூடாது.