பெரம்பூர்: புளியந்தோப்பில் வீடு முன்பு பைக் நிறுத்திய தகராறில், 8 பைக், ஆட்ேடாவை அடித்து உடைத்த கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு சுந்தரபுரம் 4வது தெருவில் வசித்து வருபவர் அமுல்ராஜ் (20). கொளத்தூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று அமுல்ராஜை பார்ப்பதற்காக நண்பர் சுரேஷ் பைக்கில் வந்துள்ளார். அவர் தனது பைக்கை முதியவர் வீடு முன்பு நிறுத்தியுள்ளார்.
இதை பார்த்து வந்த முதியவர், பைக்கை இங்கு நிறுத்தக்கூடாது, தள்ளி நிறுத்து என கூறியுள்ளார். இதனால் சுரேசுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சுரேஷ், முதியவரை தகாதவார்த்தை களால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த முதியவர் சுரேஷை அடித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற சுரேஷ் மீண்டும் 2 பைக்குகளில் நண்பர்கள் 8 பேருடன் சம்பவ இடத்துக்கு வந்து அதே பகுதியில் தெருவில் நிறுத்தி வைத்திருந்த 8 பைக்குகள், ஒரு ஆட்டோவை அடித்து உடைத்துள்ளனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்து வீட்டுக்குள் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேசின்பிரிட்ஜ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அமுல்ராஜ் வீட்டிற்கு வந்த நண்பர்கள் வாகனங்களை அடித்து உடைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இன்று காலை அமுல்ராஜ் (20), மணிபாரதி (21), சுரேஷ் என்ற சத்யா (21), விகாஷ் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பிய விமல், சாந்தகுமார், லோகேஷ் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொளத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும், குடிபோதையில் வாகனங்களை உடைத்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.