பொன்னேரி: பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல 309வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் முடிந்து 2வது வாரத்தில் ஆடம்பர தேர் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். ஈஸ்டர் பெருவிழா முடிந்ததும் வியாழக்கிழமை அன்னையின் விழாக்கொடி ஏற்றப்படும். 9 நாட்கள் நவநாட்கள் சிறப்பிக்கப்பட்டு 2வது சனிக்கிழமை தேர்பவனி நடக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர திருப்பலியுடன் திருவிழா முடிவடையும். அன்று பிற்பகல் 2 மணி முதல் சாதி, மத இன வேறுபாடின்றி திருத்தலத்தை நாடிவந்து காணிக்கைகளை செலுத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது கண்கொள்ளா காட்சியாகும். இந்தாண்டு 509வது ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள், அன்னையின் கொடியை சுமந்து வீதியுலாவாக வந்து மேளதாளங்கள் முழங்க ஆலய கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
சென்னை மயிலை மறைமாவட்ட அருட்தந்தைகள் மார்ட்டின் சார்லஸ், ஜோசப் ஜெயக்குமார் மற்றும் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபர் கபிரியேல் ஆகியோர் கொடியை மந்திரித்து கொடியேற்றத்தை துவக்கி வைத்தனர். அன்னையின் கொடி கிறிஸ்தவர்களின் பரவசம் பொங்க ஏற்றப்பட்டது. பின்னர் நற்கருணை ஆசிவாதமும், சிறப்பு மறையுரையும் நடந்தது. நடுவூர்மாதா குப்பம் கிராம மக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.