திருத்தணி: திருத்தணியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வலியுறுத்தி, இன்று காலை 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர் தீபா, காவல்துறை டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் 100 சதவீத அளவில் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருத்தணியில் இன்று காலை வருவாய்துறை சார்பில், 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளின் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை-திருப்பதி பைபாஸ் சாலை சந்திப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, காவல்துறை டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அங்கிருந்து துவங்கி பைபாஸ் சாலை, சித்தூர் சாலை, மபொசி சாலை வழியாக சுமார் 2 கிமீ மாரத்தான் ஓட்டமாக சென்று, நகராட்சி அலுவலகம் அருகே நிறைவு பெற்றது.
வழிநெடுகிலும் 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்களை கொண்ட பதாகைகள் ஏந்தியபடி, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திருத்தணி வட்டாட்சியர் மதியழகன், காவல் ஆய்வாளர் மதியரசன், உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி, வருவாய் ஆய்வாளர் கமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.