சென்னை: ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு பெற்று, 30 சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி அதிக பணம் பெற்றுள்ளனர். இந்த நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அமைந்தகரை பகுதி இயக்குனராக செயல்பட்ட செந்திலை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செந்தில் வங்கி கணக்கில் இருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ என்பவரின் வங்கி கணக்கிற்கு அதிக அளவில் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்தது. எனவே, காஞ்சிபுரம் பகுதி இயக்குனராக செயல்பட்ட ரூசோ என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் இதுவரை இயக்குநர்கள் சென்னை அமைந்தகரையை சேர்ந்த செந்தில், மைக்கேல் ராஜ், ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ரூசோ, பாஜ நிர்வாகி ஹரீஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் ஜிகேஎம் சுபமங்களா மேரேஜ் ஈவன்ட் மற்றும் ஜிகேஎம் டிரேடிங் நிதி நிறுவனம் பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சகோதரர்களான ராஜா செந்தாமரை மற்றும் முத்து ஆகிய இருவரும், காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா நிறுவனத்திற்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
குறிப்பாக, ராஜா செந்தாமரை நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை மக்களிடம் பெற்று அதை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். மேலும், ஆருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் இவர் சுமார் ரூ.600 கோடி முதலீடாக பெற்றுள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.எனவே, ராஜா செந்தாமரையிடம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சகோதரரான முத்து என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த சந்திர கண்ணன் என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது பெயரில்தான் ‘ஆருத்ரா டெக்னோ’ என்ற பெயரில் புதிய ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த ஆன்லைன் நிறுவனத்தை வைத்துத்தான், பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் சந்திரகண்ணன் கைது செய்யப்பட்டார். இவரிடம்தான் எவ்வளவு வசூலானது, எவ்வளவு பேர் முதலீடு செய்துள்ளனர், எவ்வளவு செலவானது, முறைகேடு எப்படி நடந்தது என்ற முழு விவரங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.