ஈரோடு, மார்ச் 3: ஈரோட்டில் கொள்ளை வழக்கில் 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி பாராட்டினார். ஈரோடு திண்டல் கேஏஎஸ் நகரை சேர்ந்த வினோத் என்பவரது வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பீரோவில் வைத்திருந்த 14 அரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் மேற்பார்வையில் தாலுகா இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், நகர குற்றப்பிரிவு எஸ்ஐ பூபாலன் மற்றும் போலீஸ்காரர்கள் காதர் மைதீன், சிலார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தமிழரசு (23) என்ற கொள்ளையனை கைது செய்தனர். குற்றச்சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை கைது செய்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்த தனிப்படையினரை நேரில் அழைத்து எஸ்.பி.ஜவகர் நேற்று பாராட்டி, வெகுமதி வழங்கினார்.