அன்னூர், மார்ச்3: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துர் ரஹீம்(29).இவர் தற்போது ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2 நாட்களுக்கு முன் புளியம்பட்டியில் இருந்து நண்பர் ஒருவருடன் அப்துர் ரஹீம் பைக்கில் சத்தி சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, எல்லப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது சாலையில் நடந்து சென்ற பெண்மணி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அப்போது, அவருடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.அப்பகுதி பொதுமக்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற சப்.இன்ஸ்பெக்டர் கெளதம் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துர் ரஹீம் என்பதும், அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து அன்னூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும்,தப்பி ஓடிய மற்றொரு அசாம் மாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.