ஜெய்ப்பூர்: 2047ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலகில் முதலிடத்துக்கு உயரும் என குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, “இளைஞர்கள் நேர்மறையான, வளர்ச்சி சார்ந்த கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சியை நோக்கி பயணித்து கொண்டுள்ள காலத்தில் வாழ்வது இளையதலைமுறையின் அதிர்ஷ்டம். அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். 2047ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கொண்டாடும்போது இந்திய பொருளாதாரம் உலகின் முதலிடத்துக்கு உயரும்” இவ்வாறு கூறினார்.
* யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை
தொடர்ந்து பேசிய ஜகதீப் தன்கர், “ஒருசிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி போராடுகின்றனர். பொதுசொத்துகளை சேதப்படுத்துகின்றனர். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. சட்டம் யாரையும் விட்டு வைக்காது. சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதால் தங்கள் தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது” என்று தெரிவித்தார்.