வாஷிங்டன்: தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். மாறிவரும் உலக சூழ்நிலையின் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் அதில் இந்தியாவின் முக்கிய பங்கு குறித்து பேசிய அவர், 2004ல் நான் அரசியலுக்கு வந்தபோது எம்.பி. பதவி பறிப்பு போன்ற நிகழ்வு நடக்கும் என்று நினைத்ததுக்கூட இல்லை. நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஒரு அவதூறு வழக்கில் எம்.பி. பதவி பறிப்பு போன்ற அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்ட முதல் நபர் நான்தான் என்று கூறினார்.
எவ்வாறாயினும் எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதை விட, இறுதியாக மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இந்த சூழலை சமாளிக்க வெளிநாடுகளின் உதவி தேவையா என கேள்வி கேட்கப்பட்ட போது, தான் யாரிடமும் ஆதரவை நாடவில்லை என்றும், எங்கள் போராட்டம் எங்களுடைய போராட்டம் தான் என்பதில் தெளிவாக இருப்பதாக ராகுல்காந்தி கூறினார். இந்தியாவை சேர்ந்த இளம் மாணவர்கள் இங்கு நிறைய பேர் உள்ளதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்வது தனது உரிமை எனவும் குறிப்பிட்டார்.