திருமலை: தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்கள் தேர்வு, அறிவிப்பு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம், நகை, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், வெள்ளி நகைகள், பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி ஐதராபாத் மியாபூரில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 27.540 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி நகைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பஷீர்பாக்கில் உள்ள நகைக்கடையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்து செல்வதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் அரிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கவடிகூடா அருகே நடந்த வாகன சோதனையின்போது 6 பேரிடம் இருந்து ரூ.2.09 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.