நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(46). இவரது மனைவி அமுதா(40). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவர்கள் அப்பு என்ற நாயை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். தர்மலிங்கம் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மளிகை கடைக்கு அருகே நாய் அப்பு இருந்தபோது, அந்த வழியாக வந்த லாரியில் அடிபட்டு இறந்தது. இதைப்பார்த்த தர்மலிங்கமும், அவருடைய மனைவியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதையடுத்து இறந்த நாயின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அவர்களுடைய தோட்டத்திலேயே மனிதர்களுக்கு நடத்துவது போன்று இறுதி சடங்குகள் செய்து புதைத்தனர். அப்போது தர்மலிங்கம் மொட்டை அடித்து இறுதி சடங்குகளை செய்தது அக்கம், பக்கத்தினரையும் நெகிழச் செய்தது. இறுதி சடங்கை தொடர்ந்து நாய் அப்புவிற்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த தர்மலிங்கம்-அமுதா தம்பதியினர் முடிவு செய்தனர். இதற்கான பத்திரிகையை வாட்ஸ்-அப் மூலம் உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பினர்.நேற்று அவர்களுடைய இல்லத்தில் நாய்க்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நாயின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் நாய் அப்புவிற்கு பிடித்த சிக்கன் பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் படையல் வைக்கப்பட்டது.