பள்ளிப்பட்டு, ஏப். 4: பொதட்டூர்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி தெருக்கூத்து கலைஞர்கள், நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தினர். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் வருவாய்த்துறை சார்பில் தெருக்கூத்து கலைஞர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், உதவி தேர்தல் அலுவலர் தீபா தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற கலைஞர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவில் பங்கேற்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பணம், பொருட்களுக்கு ஓட்டு விற்கக்கூடாது என்றும், வலிமையான ஜனநாயகத்திற்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நாடகம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வருவாய் ஆய்வாளர் ராமு, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.