சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 3ம் தேதி உண்ணாவிரதம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொலி வாயிலாக சென்னையில் நடைபெற்றது. மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்த குமார், தலைமைச் செயலக பணியாளர் சங்க முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் அகில இந்திய தலைவர் கணேசன் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
10 அம்சக் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் கொடுத்தும், அதன் மீது சட்டமன்ற தொடரில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது. எனவே மார்ச் 3ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.