பெரணமல்லூர், மே 12: பெரணமல்லூர் அருகே தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை அளித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
பெரணமல்லூர் அடுத்த அல்லியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் தலைமை தாங்கினார். பிடிஏ தலைவர் முனியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெயதேவி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் குபேந்திரன் வரவேற்றார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த பள்ளி 100சதவீதம் தேர்ச்சி பெற்றது குறித்து பாடம் எடுத்த ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கூலி தொழிலாளி மகன் விஜயனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், ரேவதி, கோகிலா, நிதாகர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.