வந்தவாசி, மே 12: வந்தவாசி அருகே குவாரியில் பாறைக்கு வெடி வைத்தபோது, 500 மீட்டர் தூரம் சிதறிய கல் தலையில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செப்டாங்குளம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(38), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் நெற்பயிருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கப்பட்டது. அதில் பாறை வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட கல், சுமார் 500 மீட்டர் தூரம் பறந்து வந்து ஆறுமுகம் தலையில் விழுந்துள்ளது. இதனால் ரத்தம் பீறிட்டு அலறி துடிதுடித்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனே ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஆறுமுகத்தின் மனைவி வனிதா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆறுமுகத்தின் மகன் தற்போது 12ம் வகுப்பிலும், மகள் 10ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குவாரியில் வெடி வைத்ததில் சிதறிய கல் 500 மீட்டர் தூரம் பறந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.