கண்ணமங்கலம், மே 12: கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரரின் மகள்கள் 2பேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன்(45), எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள்கள் சாருமதி(19), ஷாலினி(16), ஷோபனா(12), மகன் பூவரசன்(7). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா இறந்துவிட்டார். இதனால் சாருமதி, ஷாலினி, ஷோபனா, பூவரசன் ஆகியோர் பாட்டி குப்பம்மாவிடம் வளர்ந்து வருகின்றனர்.
இதில் சாருமதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஷாலினி 11ம் வகுப்பும், ஷோபனா 7ம் வகுப்பும் களம்பூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு முருகன், தனது பிள்ளைகளுக்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்டநேரமாகியும் போன் எடுக்கவில்லை. அதன்பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு முருகன் பேசினார். அப்போது ஏன் போனை எடுத்து பேசவில்லை? என மகள்கள் ஷாலினி மற்றும் ஷோபனாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டின் அருகில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்களாம்.
இதனை நேற்றுமுன்தினம் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சந்தவாசல் போலீசாருக்கு கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் அக்காள், தங்கை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.