குடியாத்தம், மே 12: குடியாத்தம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று குடியாத்தம் – மாதனூர் சாலையில் உள்ளி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் சீரான குடிநீர் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சமரசம் ஏற்பட்டு பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் குடியாத்தம்- மாதனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.