நாமக்கல், மார்ச் 29: நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி, இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமபுற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ், அசோலா தீவன உற்பத்தி செயல் விளக்கத்தினை, எர்ணாபுரம் கிராமத்தில் விவசாயி விஜயா வீரப்பனின் தோட்டத்தில், செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். அசோலா தீவனம் உற்பத்தி குறித்து, மாணவர்கள் கூறுகையில், கோடை காலம் வறட்சி காலங்களில், கால்நடைகளுக்கு சமசீர் சத்துக்கள் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த பசுந்தீவனங்கள் கிடைப்பதில்லை.
கால்நடைகளுக்கு குறைந்த செலவில் அதிக புரதச்சத்து நிறைந்த அசோலா தீவனத்தின் உற்பத்தி முறைகள், முக்கியத்துவம், மற்றும் பயன்பாடுகள் குறித்து செயல் விளக்கத்தின் போது விவசாயிகளுக்கு விளக்க மளிக்கப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாமக்கல் பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு நாமக்கல் வட்டார மாணவர்கள் செய்திருந்தனர்.