திருச்செங்கோடு, மார்ச் 29: கணேசமூர்த்தி எம்பி மறைவிற்கு ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கொமக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: ஈரோடு சுற்று வட்டார மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற, ஈரோடு எம்பி, மற்றும் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி எம்பி மறைவு தொகுதி மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் பெரும் இழப்பு ஆகும்.
எளிதில் அனைவரிடமும் பழகக்கூடிய சாதாரண மனிதராகிய இவர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சுமார் 20 ஆண்டு மக்கள் பணி செய்து வந்துள்ளார். தொகுதி மக்களின் தேவைக்காக பல முறை சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பேசி தொகுதி மக்களுக்கு தேவையான பல அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு வந்துள்ளார். கணேசமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மதிமுக உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.