Monday, June 17, 2024
Home » வேலூர் கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளை சிங்க முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் வீடியோ வெளியீடு: பெங்களூரு, ஆந்திராவுக்கு தனிப்படை விரைவு

வேலூர் கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளை சிங்க முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் வீடியோ வெளியீடு: பெங்களூரு, ஆந்திராவுக்கு தனிப்படை விரைவு

by kannappan

வேலூர்:வேலூரில் உள்ள பிரபல நகை கடையில் 15 கிலோ தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில், சிங்க முகமூடி அணிந்து கொள்ளையன் கடையில் நடமாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். ேவலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுவரில் துளையிட்டு புகுந்து 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்ப நாய் கொண்டு விசாரணை நடத்தியதில் சில தடயங்கள் மற்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி தனிப்படையினர் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் நேற்று ேவலூருக்கு வந்து, எஸ்பி அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், எஸ்பி ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளிடம், கொள்ளையர்களை பிடிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சம்பவம் நடந்த நகை கடைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து ஐஜி சந்தோஷ்குமார் அளித்த பேட்டியில், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த ஒரு நபர் நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்கனவே நடந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இதில் ஈடுபட்டார்களா, திருச்சி லலிதா ஜுவல்லரி நகை கடையில் கொள்ளையடித்தவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றார். காவல்துறை உயர்அதிகாரிகள் கூறுகையில், இந்த கடைக்கு கடந்த சில வாரங்களாக வந்து சென்ற வாடிக்கையாளர்களின் சிசிடிவி காட்சிகள் விடிய விடிய ஆய்வு செய்யப்பட்டது. அதில், வாடிக்கையாளர்களாக உள்ளே வந்து யாராவது கடையை நோட்டமிட்டார்களா? கொள்ளையனின் உருவத்துடன் ஒத்துப்போகிறவர் யாராவது இருக்கிறார்களா என ஒப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.நகை கடைக்குள் கொள்ளை நடந்துள்ள வீடியோ காட்சி நேற்று வெளியானது. அதில் கடைக்குள் நுழையும் மர்ம நபர் தலையில் விக் அணிந்தும் முகத்தில் சிங்க முகம் போன்ற முகமூடி அணிந்தும் வருகிறார். கை, கால்களுக்கு உறை அணிந்துள்ளார். மொத்தம் உள்ள 12 சிசிடிவி கேமராக்களையும் தேடித்தேடி ஸ்பிரே பெயின்ட் அடித்து மறைத்துள்ளார். அதன் பின்னரே நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். கொள்ளையன் உடல் மெலிந்த இளைஞராக உள்ளார். இந்த பதிவு மட்டும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது….

You may also like

Leave a Comment

sixteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi