வேலூர் : ₹25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளதாக ஆன்லைனில் விளம்பர செய்த ஆரணி வாலிபரை வேலூர் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் உலகின் எந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களையும் ஆன்லைன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து வாங்கலாம். குறிப்பாக சமூக வலைதளங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சிலர் அரிய வகையான பொருட்கள், தடை செய்யப்பட்ட உயிரினங்கள், பொருட்கள், போதை பொருட்களை விற்பனை செய்வதாக கூறி விளம்பரம் செய்து பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைனில் தேசிய விலங்கான புலிக்குட்டி ₹25 லட்சத்திற்கு விற்பனை செய்ய தயாராக உள்ளது. தேவைப்படுபவர்கள் அணுகலாம் என்று விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் வனசரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலூர் வனத்துறையினர் வாட்ஸ்அப்பில் வந்த எண் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த செல்போன் வைத்திருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன்(24) என்பதும், தற்போது வேலூர் சார்பனாமேட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் வனத்துறையினர் நேற்றுபார்த்தீபனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தமிழ். இவர் சென்னையில் பெட் ஷாப் வைத்துள்ளனர். இருவரும் வாட்ஸ்அப்பில் புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது என்று விளம்பரம் செய்த பார்த்தீபனும் நண்பர்கள். இவர்கள் தமிழகத்தில் விலங்குகள் தொடர்பாக கண்காட்சி எங்கு நடந்தாலும் அங்கு செல்வார்களாம். பின்னர் தங்களுக்கு பிடித்த விலங்குகள் மற்றும் பறவைகளை வாங்கி ஷாப் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். தற்போது பார்த்தீபன் வாட்ஸ்அப் குரூப் மற்றும் அவரது ஸ்டேட்டஸில் புலிக்குட்டி விற்பனை தொடர்பாக விளம்பரம் செய்துள்ளார். இது ெவறும் விளம்பர மோசடியா அல்லது உண்மையில் புலிக்குட்டி அவரிடம் உள்ளதா என தெரியவில்லை. அவர் வனவிலங்குகளை ஏற்கனவே விற்பனை செய்துள்ளாரா என்று பார்த்தீபனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய உள்ளோம்’ என்றனர். …