வேலூர், ஏப்.4: காட்பாடியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹75 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதில் ₹50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என்றும், அதேபோல் ₹50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் சரக்குகள் போக்குவரத்திலும் உரிய ஆவணங்கள் வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. அதேபோல, பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இவற்றை கண்காணிக்கவும், தடுக்கவும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பறக்கும் படைகளும், நிலை கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை காட்பாடி மெட்டுக்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த சித்தூரை சேர்ந்த முகமதுஅனீஸ் என்பவரிடம் ₹75 ஆயிரம் பணம் இருந்தது. இவர் நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்புவதாக தெரிவித்தார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் கைப்பற்றப்பட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.