பொன்னை, ஏப்.4: வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி, ₹24.19 லட்சத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், 21 கிராம் தங்கம், 355 கிராம் வெள்ளியு கிடைத்தது.
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் சுப்பிரமணியராகவும், மலையடிவாரத்தில் ஆறுமுகநாதராகவும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கொடியேற்றத்துடன் பிரமோற்சவ தேர்த்திருவிழா நடைபெற்றது. அதில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, கோயில் உண்டியலில் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடர்ந்து மூன்று கட்டங்களாக நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணி நேற்று மாலை 5 மணி அளவில் முடிவடைந்தது. அதில் ₹24 லட்சத்து 19 ஆயிரத்து 220ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 21 கிராம் தங்க நகைகள், 355 கிராம் வெள்ளி நகைகளும் கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் செயல் அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.