ஆட்டையாம்பட்டி, மே 22: வீரபாண்டி கிராம பஞ்சாயத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருமணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். இந்த ஏரியின் ஆழம் குறைந்து இருப்பதால், ஏரியின் நீர் பரப்பளவை அதிகரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏரி ஆழப்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஏரி நீர் வருடம் முழுவதும் வற்றாமல், இப்பகுதியில் விவசாயம் செழித்துள்ளது. ஏரிக்கு தற்சமயம் மழைநீர் இல்லாத நிலையில், சாக்கடை நீருடன் சாய பட்டறை ரசாயன கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நேற்று காலை ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து ஏரி கரை ஓரம் ஒதுங்கி உள்ளது.
ஒவ்வொரு மீன்களும் அரை கிலோ, ஒரு கிலோ என வளர்ந்து இருந்தது. மீன்கள் இறந்து கிடந்தது தெரிந்த மக்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இன்று நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு, நீரின் தன்மையை பரிசோதித்து மீன்கள் உயிரிழந்தற்கு கோடை வெயில் காரணமா அல்லது ரசாயன கழிவா, வேறு வகையிலான விஷம் கலக்கப்பட்டதா என கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.