Tuesday, May 21, 2024
Home » வீட்டில் இருந்து மாமனார் மாயமான தகராறு மனைவியை அடித்து கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்

வீட்டில் இருந்து மாமனார் மாயமான தகராறு மனைவியை அடித்து கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்

by kannappan

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரி (27). கார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா (24), எம்.ஏ., பட்டதாரி. திருமணமாகி 2 ஆண்டாகியும் தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்களுடன் ஜீவிதாவின் தந்தை மகேந்திரன் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தங்கியுள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மகேந்திரன், மகள் வாழ்க்கைக்கு பிரச்னை வந்துவிட கூடாது என்பதற்காக, வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதனால் கோபமடைந்த ஜீவிதா, உங்களால்தான் எனது அப்பா மாயமாகி விட்டார் என கூறி தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஹரி, ஜீவிதாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.இதனால் மனமுடைந்த ஜீவிதா, நேற்று முன்தினம் பாத்ரூமில் தூக்கு போட்டுக் கொண்டதாக கூறி, அவரை மயங்கி நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஹரி சேர்த்துள்ளார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. தகவலறிந்து அங்கு திரண்ட உறவினர்கள், ஜீவிதாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜீவிதாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் கண்ணப்பன் முன்னிலையில் ஜீவிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கையில் ஜீவிதாவின் மார்பில் பலமாக தாக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், கொலை வழக்காக பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு ஹரியை கைது செய்து விசாரித்தனர். இதில் மனைவியை பலமாக அடித்ததில் அவர் இறந்துள்ளார். இதை மறைப்பதற்காக, ஜீவிதா தற்கொலை செய்து கொண்டதாக ஹரி நாடகமாடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

You may also like

Leave a Comment

4 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi